3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூலை 2021

மு; மேத்தா


 



                               கண்ணீர்ப் பூக்கள்  

எந்த தேவதையாலும் அவன் 

ஆசிர்வதிக்கப்படவில்லை 

ஆனால் 

எல்லாச் சாத்தான்களாலும் 

இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!


எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை 

ஆனால் 

எல்லாப் புயல்களோடும் அவன் 

போராடியிருக்கிறான்!


மகிழ்ச்சி மலர்களை அவனால் 

பறிக்க முடியவில்லை 

அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம் 

கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.


என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை 


சோகச் சிலுவைகளை நெஞ்சில் 

சுமந்து கொண்டு 

அவன் நடக்கிறான் 

அழுகைக்குப் பிறகும் ஓர் 

அணிவகுப்பு நடத்துகிறான்!


சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது 

கவிப்பயணம் காலசைக்கிறது 

துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!

பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழமுடியா வீழ்ச்சிகள்!


மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!


ஆடுகின்ற பேய்மனதில் 

ஆயிரமாம் ஆசைகள் 

ஆயிரமாம் ஆசைகட்கு

அனுதினமும் பூசைகள் !


சூடுகின்ற மாலைகளோ 

தோள்வலிக்கும் தோல்விகள் 

தோள்வலிக்கும் தோல்விகள் நான் 

தொடங்கிவைத்த வேள்விகள்!


காலமெனும் தாளிலொரு 

கதையெழுத வந்தவன் 

கதையெழுத வந்ததனால் 

கனவுகளில் வெந்தவன்!


ஓலமிடும் சிந்தனையால் 

உறங்குவதை விட்டவன் 

உறங்குவதை விட்டதனால் 

உடல் சிதைந்து கெட்டவன்!


மன்னவரின் சபைகள்தமை 

மயங்க வைத்த பாவலன் 

மயங்கவைத்த வேளையிலும் 

மயங்கிவைத்த கோவலன்!


மின்னும் விழிப் பொற்குளத்தில் 

மீன்பிடிக்கப் போனவன் 

மீன்பிடிக்கப் போனதனால் 

வேதனைக்குள் ளானவன் !


ஈரவிழிக் காவியங்கள் 

எழுதி வெளி யிட்டவன் 

எழுதி வெளி யிட்டதனால்  

இதயங்களைத் தொட்டவன்!


ஓரவிழிப் பார்வைகளின் 

ஊர்வலத்தில் சென்றவன் 

ஊர்வலங்கள் சென்றபோது 

ஒதுங்கிவந்து நின்றவன்!


பாயும் நதி மீதிலொரு 

படகினை நான் ஓட்டினேன் 

படகை நன்கு ஓட்டியதால் 

பரிசுகளை ஈட்டினேன்!


ஆய பல சுமைப் பரிசை 

அப்படகில் ஏற்றினேன் 

அப்படகு கவிழ்ந்ததனால் 

அலைநடுவே மாட்டினேன்!



வரங்கொடுக்கும் தேவதைகள் 

வந்தபோது தூங்கினேன் 

வந்தபோது தூங்கிவிட்டு 

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!


கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக் 

கைகழுவி வீசினேன் 

கைகழுவி வீசிவிட்டுக் 

காலமெல்லாம் பேசினேன்!


புல்லர்களின் மனக்குகையில் 

புனித விதை விதைத்தவன் 

புனித விதை விதைத்தபோது 

புதை மணலை மிதித்தவன்!


செல்லரித்த மானுடத்தைச் 

சீர்திருத்தப் பாடினேன் 

சீர்திருத்தப் பாடியதால் 

பேரெதிர்ப்பைத் தேடினேன்!



அற்பர்களின் சந்தையிலே 

அன்பு மலர் விற்றவன் 

அன்பு மலர் விற்றதற்குத் 

துன்ப விலை பெற்றவன்!


முட்புதரில் நட்பு மலர் 

முளைக்குமென்று நம்பினேன் 

முளைத்து வந்த பாம்புகளே 

வளைத்த போது  வெம்பினேன்!


நெஞ்சுவக்கும் மலர் பறிக்க 

நெருப்பினில் கை விட்டவன் 

நெருப்பினில் கை விட்டதனால் 

நினைவுகளைச் சுட்டவன்!


வஞ்சி மலர் ஊமை மன 

மாளிகையின் அதிபதி!

மாளிகையின் அதிபதிக்கு 

மனதில் இல்லை நிம்மதி!



சோலைவழி வீதிகளில் 

சுகமளிக்கும் பார்வைகள் 

சுகமளிக்கும் பார்வைகள் என் 

சுதந்திரத்தின் போர்வைகள்!


பாலைவன மணல் வெளியில் 

பாடகனின் யாத்திரை 

பாடகனின் யாத்திரையே 

பசித்தவர்க்கு மாத்திரை!


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!