16 அக்டோபர் 2020

பயம், பதற்றம்.தவிர்ப்பது எப்படி?

 




சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்து கொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?! இங்கே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்!


பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்து இருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும் போதோ, மாறும் போதோ அல்லது அதிலிருந்து விலகும் போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய் விடுகிறது.


கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மன நலக் கேடுகளை விளைவிக்கிறது.


பலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பினும், பெரும்பாலானோர் உதவி பெறுவதில்லை.


பதற்றம் உடலுக்குக் கெடுதலா?

ஓரளவு பதற்றம் நல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும் கூட! இது எதிர்பாராத ஆபத்திலிருந்தோ, தாக்குதலிலிருந்தோ நம்மைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, கவனத்துடன் இருக்கச் செய்து, வேலைகளைத் திறம் படச் செய்ய உதவுவதுடன், பிரச்சினைகளைச் சமாளிக்கத் தூண்டுகோலாகவும் இருக்கிறது.


ஆனால் எல்லா நேரமும் பதற்றமாக இருக்கும் போது உடல், மனஅளவில் பல உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


‘பேனிக் அட்டாக்’ (Panic Attack) குறுகிய கால அவகாசத்துக்குள் (10 நிமிடங்களுக்குள்) பதற்றத்தின் அறிகுறிகள் பன்மடங்காக உச்சத்தை அடையும். மூச்சடைப்பு, மூச்சுத் திணறல், சாகப் போவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.


ஃபோபியா (Phobia) அதிக பயம்

மற்றவர்கள் சாதாரணம் என்று நினைக்கக் கூடிய சூழ்நிலைகள், குறிப்பிட்ட சில இடங்கள், பொருட்கள் அல்லது மிருகங்களிடம் சிலருக்கு அளவு கடந்த பயம் இருக்கும். அதிக ஜன நெரிசல் கொண்ட இடங்களையோ அல்லது எளிதில் வெளியே செல்ல முடியாத இடங்களையோ (உதாரணமாக ரயில், பேருந்து) கூட சிலர் தவிர்க்க நினைப்பார்கள்.


ஆனால் இவ்வாறு தவிர்ப்பது, பயத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைக்காது. பதற்றப் படுவோம் என்று ஒவ்வொரு சூழ்நிலையையும் தவிர்த்தால் அதிலேயே பொழுது கழிந்து விடும். வாழ்க்கை இன்னமும் சிக்கலாகத் தான் போகும்.


*பதற்றமும் உடல் நலமும்*:


பதற்றம் பல உடல் உபாதைகளுடன் தொடர்பு உடையது. பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த அறிகுறிகளும் தீவிரமாகி உடலளவில் நெஞ்சு படபடப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலில் வலி, சோர்வு, நடுக்கம், முகம் வெளிறிப் போதல், வியர்த்தல், மரத்துப் போதல், வாய் உலர்தல், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.


எப்பொழுதும் கவலையுடன் இருத்தல், கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் எரிச்சலடைவது, மனச் சோர்வு போன்ற மன உபாதைகளும் ஏற்படும்.


பதற்றம் காரணமாக வரும் உடல், மன உபாதைகள் வேறு சில நோய்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. எனவே பதற்றம் காரணமாக இந்த உபாதைகள் வரும் போது, வேறு ஏதோ நோய் வந்து விட்டதாக தவறாகக் கணிக்கக் கூடாது.


பதற்றம் ஏற்படக் காரணங்கள்

மரபு வழி காரணங்கள் முக்கியமானவையாகக் கூறப் படுகின்றன. குடும்பத்தினர் யாருக்காவது இது இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

மூளையில் உள்ள சில புரதங்கள் குறைவினாலும் பதற்றம் ஏற்படலாம்.

வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள், உதாரணமாக, விபத்து, இறப்பு போன்றவை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை அதிகப் படுத்தும். மன அழுத்தமும் பதற்றத்தை அதிகரிக்கும். பதற்றத்தில் இருந்து எப்படி வெளி வருவது?


புரிந்து கொள்ளுதல்

உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பதற்றத்தின் அறிகுறிகள், எந்த விதமான சூழ்நிலையில் ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எப்படிச் சரியாகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை தினமும் எழுதி வைப்பதன் மூலம் உங்கள் பதற்றத்தைப் பற்றிய புரிதல் அதிகமாகும். அதை எப்படிச் சரி செய்வது என்றும் பார்க்க முடியும்.


உணவு முறை


அதிகமாக காபி பருகுவது பதற்றத்தை அதிகரிக்கும்.


பழக்கம்


புகை பிடித்தல், மது அருந்துதல் பதற்றத்தை அதிகரிக்கும்.


வாழ்க்கை முறை


எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பது, உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தத்தின் காரணம் அறிந்து திறம் பட சமாளிப்பது பதற்றத்தைச் சரி செய்ய உதவும்.


பதற்றம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். மருந்துகள் தவிர கௌன்சலிங் (Counselling), காக்னிடிவ் பிஹேவியர் தெரபி (Cognitive Behaviour Therapy) என பல விதமான கலந்தாய்வு சிகிச்சைகள் உள்ளன.


உடற் பயிற்சி, யோகா போன்றவையும் பெரிதும் உதவும். ஒரு நாளைக்கு 30 நிமிடம் விகிதம் வாரத்திற்கு 5 முறையாவது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.


யோகா எவ்வாறு உதவுகிறது?


ஆசனம், மூச்சுப் பயிற்சிகள், தியானம் அனைத்துமே பதட்டத்தைப் பெருமளவில் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பதற்றத்திற்குக் காரணமாகக் கூறப் படும் புரதக் குறைவுகளை யோகா சரி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

யோகப் பயிற்சிகளால் உடலும், மனதும் எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பதால் எளிதில் பதற்றம் அடைய மாட்டோம்.

யோகா, விழிப்புணர்வை அதிகரிப்பதால் உடலிலும், மனதிலும் ஏற்படும் நிகழ்வுகளில் அதிக கவனத்துடன் இருக்க முடிகிறது. பதற்றத்தின் அறி குறிகளைக் கண்டறிந்து சரி வரக் கையாள முடிகிறது.


நிதானம்

 




உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.


நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.


இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூலக் காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.


கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.


கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.